Wednesday, June 8, 2011

சட்டென நின்றது மழை !

வருத்தப் பட்டுக்கொண்டது
உன் வீட்டுக் காலண்டர்
பிறந்திருந்தால் உன்
பிறந்தநாளாய்
பிறந்திருக்க வேண்டும் என !


பலாச்சுளை காய்த்தது
நீ குளித்த
நீரைக் குடித்து
வளர்ந்த வேப்ப மரத்தில் !

பட்டுத் துணியாய் மாறியது
நீ துவட்டி விட்டு
கொடியில் காயப்போட்ட
உன் துண்டு !

என்னையே மறுபடியும்
உடுத்திக் கொள் என்று
கதறி அழுதது நேற்று
நீ கழட்டி போட்ட ஆடை !

கண்ணாடியில் உன் முகம்
பார்த்தாய் !
அழகானது கண்ணாடி !

உன்
முகப் பொலிவில் தன்னை
மெருகேற்றிக் கொண்டது
நீ அணிந்திருந்த
வைர மூக்குத்தி !

நீ
தலை கோதிவிட்டு வைத்த
சீப்பின் பற்களில்
முளைத்தது ரோஜாப் பூ !

உன்
உதட்டின் சிவப்பில்
சாயம் பூசிக் கொண்டது
நீ பூசும்
உதட்டுச் சாயம் !

உன்
மூச்சுக் காற்றில்
தன்னை மனம் கூட்டிக் கொண்டது
நீ சூடிய
மல்லிகைப் பூ !

உன்னை போலவே
சிரித்தது
நீ அணிந்த
கண்ணாடி வளையல் !

பல்லக்காய் மாறிப்போனது
உன் காலணிகள்
உன் பூப் பாதம்  பட்டவுடன் !

வீட்டை விட்டு
வெளியில் வந்தாய் நீ !

சூரியனும்
கதிர்களை சுருக்கிக் கொண்டான்
உன்னை பார்த்ததும்
வெட்கத்தில் !

வானம் இருண்டது !
மேகங்கள் சூழ்ந்தன !
வானமகள் துள்ளினாள்
ஆனந்தத்தில் !
மழை பொழிந்தாள் பூரிப்பில் !

குடை விரித்தாய் நீ !
சட்டென நின்றது மழை !

உன்னை
தீண்ட வந்த மழைத் துளிகளுக்கு
ஏமாற்றம் !

இருள் வந்தது !
நிலா மகள்
குளிர்ந்தாள் பரவசத்தில் !

குளிர்காற்று தென்றலாய் வீசியது !
உன்னைத் தீண்டி விளையாடியது !

"அதோ விண்மீன்கள்" என்று
பக்கத்து வீட்டு குழந்தைக்கு
கை நீட்டி காட்டி விட்டு
தூங்கச்சென்றாய் !

உன் முகம்
பார்த்த சந்தோசத்தில்
இரவு முழுவதும்
மின்னிக்கொண்டிருந்தன
விண்மீன்கள் !

-- விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment