Thursday, April 19, 2012

படித்ததில் பிடித்தது !


நீ கோலமிட வரும்
காலம் பார்த்து காத்திருந்து
உன்னை காதலிக்க
ஒளியெனும் தூது விட்டு
கதிரவன் கண் சிமிட்ட!
உன் கொலுசின் ஒலிக்கேட்டு
மோகினி பிசாசு வருகிறதென்று
பொய்சொல்லி
தன் நட்சத்திர தோழிகளை
கூட்டிக்கொண்டு ஓடி ஒளிகிறது
பொறாமைப்பிடித்த நிலவு!
உன் வரவை எதிர்ப்பார்த்து
பேரழகி வருகிறாள்
அவள் கூந்தலில்
நான் குடியேறப்போகிறேன்
என பெருமைப்பொங்கி
நறுமணம் கமழ்ந்து
புன்னகை பூக்கிறது பூக்கள்!
உன்னுடலில் ஒட்டிக்கொள்ள
ஆசைக்கொண்டு
உயிர் துறந்த கூட்டுப் புழுக்களின்
கூட்டு முயற்சியில்
பட்டுப்பாவாடையில் பவனி வருகிறாய் நீ!
இந்த மண் உனக்கு
தன் மடி மீதில்
பச்சைக்கம்பளம் விரித்து
தாலாட்டக் காத்திருக்கிறது!
இவை அனைத்திற்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நீ எனைக் கானவே வருகிறாய் என்பது!
உன்னருகில் நான் வந்து
கட்டியணைத்து கவிபாட
மதிய சூரியன்
என்மேல் அனல் கக்கி உமிழ்கிறான்
ஆதங்கம் கொண்டு
நம்மைப் பிரித்திடவே !
நாம் மீண்டும்
பிரியாமல் பிணைந்திடவே
மாலை நேரம் வரை
காத்திருந்து பார்த்து பார்த்து
கண்கள் மங்கி
ஒளி இழந்து ஓடி ஒளிகிறான்
மாலை நேரத்து ஆதவன்!
போட்டிக்கு பேரழகி வந்தாளென்று
ஓடி ஒளிந்த நிலவு-இரவில்
பொலிவாகி வெளி வருகிறது
அவளிடத்தில் காதல் கொண்ட
நம் ஆதவன்
கடுப்பாகி மீண்டும் நம்மிடத்தில்
சரணாகதி ஆனானென்று சந்தோசத்தில்!
பூக்கள் வாடின
புன்னகை பூத்து வந்தோமே
பூவை இவள் கூந்தல் சேர
நம்மை விட்டு இவள்
அவனிடத்தில் புன்னகைக்கிறாளே என்று!
உன்னை தொட்டு தழுவிய
என்னைக் கண்டு
கூட்டுப் புழுக்களும்
கசங்கி கதறி அழுதன
இவளுக்காய் உயிர் இழந்தோம்
இவள் அவனுக்காய் உயிர் வாழ்கிறாளே என்று!
பூமி விரித்த பச்சைக் கம்பளம் கூட
பட்டுப்போய் காட்சியளிக்கிறது!
என்னவளே
என் முகத்தைமட்டும் பசுமையாக்கி
எல்லோர் முகத்தையும்
வறட்சியாக்கி விட்டாய் நீ!
நீ என் அருகாமை எப்பொழுதும்
வேண்டுமென்று
உன்னை முப்பொழுதும் நினைக்கிறது என் உள்ளம்!

No comments:

Post a Comment